Friday, October 7, 2011

OCT'11


விரட்டுவோம் சாதி எனும் பேயை
                                      -மனங்களிலிருந்து. 

     
அன்புத் தோழர்களே!
                           வணக்கம். ஒவ்வொரு மாதமும் வரவேற்பறை எழுத உட்காரும்போது, நல்ல செய்தி களை, நம்பிக்கையளிக்கக் கூடியவற்றை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால், எழுத உட்கார்ந் தால், உலகில் நடக்கும் பல்வேறு மோசமான நிகழ்வுகள் மட்டுமே கண்முன் ஊசலாடுகிறது.
                        
கொடுங்கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வன்முறை வெறியாட்டத்தின் விளைவாக ஏற்பட்ட ஆறாத புண்களுக்கு மருந்தாகவும், வற்றாமல் பெருக்கெடுத்து ஓடிய கண்ணீரைத் துடைப் பதாகவும், மிகத் தாமத மானாலும் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு இப்பொழுது வந்துள்ளது.

ஒரு ஜனநாயக நாடு, அதற்கென்று ஒரு மிகச் சிறந்த அரசியல மைப்புச்சட்டம், அந்தச்சட்டம் எளிய மக்களுக்கு அளிப்பதாகச் சொல்லப்படும் உரிமைகள், பாதுகாப்புகள். இத்தனை இருந்தும், இந்த சட்டத்தின் மாண்பையும், அதன் மூலம் நலிவடைந்த, காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் நலனையும் பேண வேண்டிய அரசு அதிகாரிகளும், காவல் துறையி னரும், ஒரு வெறிபிடித்த கும்பலாக, வேட்டை நாய்களின் கூட்டமாக அவதாரம் எடுத்து, ஒரு மலைசார்ந்த கிராமத்தின் மக்களையே துவம்சம் செய்ததும், கடித்துக் குதறியதும், மானபங்கம் செய்ததும் நினைத்தாலே மனது பதறுகிறது. 

அந்த எளிமையான, எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாத, வெள்ளாந்தி மக்களுக்கு கிடைத்த ஒரு சிறிய ஆறுதல் தான், சிபிஐ அளித்த குற்றப் பத்திரிக்கையை 18 ஆண்டுகளாக விசாரித்து தருமபுரி அமர்வு நீதி மன்றம்  அளித்த தீர்ப்பு. ஆயினும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மேல் முறையீடுகள் முடிந்து, இறுதி நிவாரணமும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்க இன்னும் ஆண்டுகள் சில பிடிக்கும். தாமதமாகும் நீதி கிடைக்காத நீதி எனும் நிலை மாறவேண்டு மெனில், நீதித்துறையில் சீர்திருத்தம் கொண்டு கொண்டுவர வேண்டிய அவசரத்தை இவ்வழக்கில் ஏற்பட்ட தாமதம் மீண்டும் நினைவூட்டுகிறது.

சரி, ஏதோ 20ம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் சமுதாயத்தில் நலிவடைந்த மக்கள் இவ்வாறு அசுர இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்த 18-20 வருடங்களில், பலரும் சமூக நீதிக்காக நெடும்பயணம் சென்றுள்ளார்கள். அதனால் இந்த 21-ம் நூற்றாண்டிலாவது நிலைமை சற்று மாற்றம் கண்டிருக்கலாம் எனும் நம்பிக்கையை செப்டம்பர் மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று, பரமகுடியில் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட ஒரு சிறிய தலித் அமைப்பைச்சேர்ந்த இளைஞர்கள் மீது அவசியமில்லாமல் நடத்திய துப்பாக்கிச்சூடு, தகர்த்தெறிந்துவிட்டது. 

குறைந்தபட்ச விதிகளைக் கூட கடைப்பிடிக்காமல், 200 பேர் வரை மட்டுமே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தலித்து இளைஞர்களை சாதுரியமாகக் கையாளாமல், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு, அதனால் மார்பிலும், தலையிலும் கூட குண்டு பாய்ந்து சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் கடை வீதிக்கு வந்த முதியவர்களும் அடங்கும். 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். 

மனித உரிமை ஆர்வலர்களும் மற்ற அமைப்புகளும் நடத்தியுள்ள விசாரணையில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, கலவரம் போன்ற சூழலே இல்லை என்று தெரிகிறது. 

அது ஏனோ தெரியவில்லை, சாதிவெரிபிடித்த ஆதிக்க சாதியினர் மட்டுமல்லாமல், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களும், குறிப்பாக காவல்துறையினர், அடிக்கடி தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் சிறுபான்மை மக்கள் மீதும் வன்முறையை ஏவி விடுவது வழக்கமாக உள்ளது. நம்நாட்டில் காரண காரியங்கள் கூட இல்லா மல் மனித உயிர்கள் கொத்து கொத்தாக போகின்றன. இந்தியாவில் பொருட்களின் விலைவாசி உயர்ந்து கொண்டே போனாலும், மனித உயிர்கள் மட்டும் மலிவு. அதிலும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் உயிர் மிக மலிவானது. 
    
அதனால்தான், தமிழக அரசு, இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனும் அமைத்து விட்டு முடித்துக் கொண்டது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் வசதிக்கு ஏற்ற விதமாக இரட்டை வேடம் போடுகின்றன. சமூகத்தில் இருந்து சாதி வேறுபாடுகளைக் களைவதற்கு, ஓட்டுப்பெட்டி அரசியலுக்காக போடப்படும் சாதிக் கணக்குகள் மிகப்பெரிய தடையாக உள்ளன.

என்னதான் இந்தியா வளர்ச்சிப்பாதையில் பீடு நடை போடுவதாக கூறப்பட்டாலும், சாதிப் பேயை நம் சமுதாயத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் விரட்டாமல் நாம் ஒரு முதிர்ச்சியடைந்த அறிவார்ந்த சமுதாய மாக உலக நாடுகளின் முன் தலை நிமிர்ந்து நடக்க இயலாது. இதற்கு முதற் கட்டமாக சாதிப்பேயை மனிதர்களின் மனங்களிலிருந்து விரட்டுவதை நம் தலையாயக் கடமையாகக் கொள்வோம். 
                                                                                              நட்புடன்,
அ.நாராயணன்.

SEP'11

 சமூகம் முதிர்ச்சியடைய 
                         - ஒரு வாய்ப்பு              
அன்பு தோழர்களே!                                                                                     
                    வணக்கம், அண்ணா ஹசாரே, லோக்பால், ஊழல் - இவைதான் ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதிலும் மிக அதிகமானவர்களால் உச்சரிக்கப்பட்ட, எழுதப்பட்ட, வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட மூன்று வார்த்தைகள். அநேகமாக, இந்தியாவையும் தாண்டி, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இதழ்களிலும் இவை இடம் பிடித்தன என்பதால், அண்ணா ஹசாரேவின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டம், உலக அளவில் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் சட்டம், ஊழலை ஒழித்துவிடும் ஒரு மந்திரக்கோல் அல்ல என்பது அண்ணா ஹசாரே உட்பட எல்லோருக்கும் புரியும். இந்தக் குழுவினர் முன்வைத்த லோக்பால் மசோதாதான் சிறந்தது என்பதை வலியுறுத்த அவர்களுக்கே உரிமையில்லை என்பதும் உண்மை. முதலில் அண்ணா ஹசாரே தலைமையில் ஏற்படுத்தப் பட்ட குழுவில் இடம் பெற்ற எல்லோரும் மேட்டுக்குடியினர் , அதில் ஒரு பெண்மணி கூட இடம்பெறவில்லை, சிறிதும் முன் யோசனையில்லாமல் அமைக்கப்பட்ட குழு என்று நானே உடனடியாக விமர்சனம் செய்தேன். ஆனால் இப்போதைய போராட்டத்தின் தார்மீகத்தை ஆதரிக்கிறேன். ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட எல்லோரும் ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன், நம்பிக்கையுடன் அண்ணாவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

அண்ணா ஹசாரே குழுவினரின் இந்தப் போராட்டம் மீது கீழ்கண்ட 5 விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள்தான் இந்தப் போராட்டத்தை மிகைப் படுத்தி ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டன. இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினரைத் தவிர்த்து, அவர்களை எதிர்க்கும் இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்கும் போராட்டம், படித்த நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே கலந்து கொண்ட போராட்டம். ஊழலால் பயன் பெற்றவர்களும், ஊழல் வாதிகளும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம். பாராளுமன்ற ஜனநாயகத்தையே சிறுமைப்படுத்தும் வகையில் நடந்த போராட்டம் என்பவை அவை.

ஆனால், இந்த வாதங்கள் எல்லாம், உண்மையை வேண்டுமென்றே புறக்கணித்து, அல்லது சரியாகப் புரிந்து கொள்ள இயலாமல், அல்லது ஒரு தற்காப்பு / தாழ்வு மனநிலையி னாலோ அல்லது ஈகோ மனநிலையினாலோ வைக்கப்படும் வாதங்கள்.

இந்தப் போராட்டத்தில் இந்துத்துவ சக்திகள் அதிகமாகக் கலந்து கொண்டது உண்மை. இதனை இந்துத்துவவாதிகளும், மதவாதிகளும், ஊழலையும் ஒரு பெரிய பிரச்சனையாகப் பார்க்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். அது போல் படித்த நடுத்தர வர்க்கத் தினர் அதிக அளவில் வீட்டுக்கு வெளியில் வந்து குரல் கொடுப்பது, நமது நாட்டின் அரசியலுக்கு, ஜனநாயகத்திற்கு மிகச்சிறந்த நன்மை. ஏனென்றால், அரசியல் ஆர்வம் உள்ள நடுத்தர வர்க்கத்தினால் சமூகத் தளத்தில் தார்மீகத்தையும், ஒழுக்கத்தையும் கொண்டு வர முடியும். ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியாக (Conscience Keepers) உருவெடுக்க முடியும். அது நமது ஜனநாயகத்தை முதிர்ச்சி யடையச் செய்ய உதவும். 

 எந்த ஒரு மக்கள் திரட்சியிலும், ஊழல் பேர்வழிகள் ஆதாயம் காண முயல்வது இயற்கை. மேலும் அன்று இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடியவர்கள் இன்றும் அவ்வாறு திரள்வார்கள் என்பது மிகையானது. இன்று நிதிஷ்குமார் போன்று உண்மையானவர்களும், மாயாவதி போன்ற தலித்தலைவர்களும் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். அங்கொன் றும் இங்கொன்றுமாக ஏதாவது பிரச்சனை எழலாமே தவிர, இந்துத்துவ சக்திகள் ஒன்று திரளும் வாய்ப்புகள் மிகக்குறைந்து விட்டன. சமூகம் முதிர்ச்சியடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

அதே போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்கள் விருப்பத்தைத்தான் முதன்மைப் படுத்துகிறது. மக்கள் விருப்பம் போலத்தான் நாடாளுமன்றம் செயல்பட முடியும். லோக்பால் மசோதா பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால், மக்கள் மன்றம்தான் வெற்றி பெறும் என்பது கண்கூடு.
                
ஆக, ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் மக்களிடம் அரசியல் ஞானத்தை, உணர்2வை மேம்படுத்த உதவியுள்ளது. மக்கள் பிரதிநிதி களின் கடமையை நன்கு உணர்த்தியுள்ளது.

அதோடு ஒட்டுமொத்த அரசியல்வாதிகளிடம், அரசு ஊழியர்களிடம், பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம், நேர்மை குறித்த விழுமியங்களை ஆழப்பதிப்பதற்கு ஒரு பாதையைக் காட்டியுள்ளது.

 இந்த மாற்றத்திற்கு வழிவகுத்த கதாநாயகன் அண்ணா ஹசாரே உட்பட பொது வாழ்வில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினைத் தவறவிடாமல், கிடைத்துள்ள பாதையில் எல்லோரையும் இணைத்துக் கொண்டு, திறம்பட பயணம் செய்ய வேண்டும்.

அண்ணா ஹசாரே குழுவினருக்கு இதில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஒரு சில அடி கள் தவறினால் கூட, அவை மிகைப்படுத்தப் பட்டு, இந்த இயக்கத்தின் நம்பகத்தன்மை பாதிப்படையும் ஆபத்து உள்ளது. அவ்வாறு நடக்காது என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மட்டு மல்ல, தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், ஊடகங்களும் கூட, ஊழல் செயல்பாடுகளுக்கு விதிவிலக்கல்லவே.

நேற்று நடந்தவை நேற்றோடு போகட்டும். பிராயச் சித்தத்திற்கான நேரமிது. முறைகேடாகப் பெறும் பெரிய வெற்றி கூட மன அழுத்தம் தரக்கூடியது. தோல்வியில் முடியும் நேர்மையான முயற்சி கூட மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இதனை ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொண்டு விட்டால், இந்தியா உண்மையாகவே ஒளிரும் அல்லவா?
                                                                                                                                   நட்பு பாராட்டும்
அ.நாராயணன்
                                                                                                                       

Tuesday, October 4, 2011

AUG'11


உலகமயமாக்கப்பட்ட பயங்கரவாதம்!
                                              -தீர்வு தான் என்ன?

அன்புள்ள தோழர்களே,
                 
              ‘நான் முஸ்லிம்களை வெறுக்கவில்லை, ஆனால், முஸ்லிம்கள் ஐரோப்பிய இனக் கலாச்சாரத்துக்குள் ஊடுருவி, காலனியாதிக்கம் செய்து, பல்லினக் கலாச்சாரம் கொண்டதாக ஐரோப்பா மாறுவதை முறியடிப்பேன்’ - ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரேவிக் எனும் 33 வயது நார்வே இளைஞன், தெளிவாக, விலாவாரியாக, இப்படிப்பட்ட வாதங்கள் நிரம்பிய 1500 பக்க வெறுப்புப் பிரகடனம் ஒன்றை பலவருடங்களாகத் தயாரித்து, வலைத்தளத்தில் ஏற்றிவிட்ட பின்னரே தனது பயங்கரவாதச் செயலை நிறைவேற்றியுள்ளான்.
       
தனக்கு சக்தியும் வெறியும் ஏற்படுவதற்காக போதைமருந்தேற்றிக் கொண்டு, வெடி குண்டும், இயந்திரத்துப்பாக்கியுமாக தனது பழி வாங்கல் படலத்தை நிறைவேற்றியுள்ளான்.
          
இந்த நிகழ்வு நடந்தவுடன், 95 விழுக்காடு மக்களும், ஊடகங்களும், உடனடியாக இது இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வேலைதான் என்று வழக்கம்போல தவறான முடிவுக்கு வந்தார்கள். உலகில் மிகப்பாதுகாப்பான, குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடைபெறும், உலக அமைதியையும் ஜனநாயகத்தையும் சோசியலிசப் பொருளாதாரத்தையும் போற்றும், ஸ்கான்டினேவிய நாடுகளில் ஒன்று நார்வே. வருடாவருடம் நோபல் பரிசுகள்  வழங்கும், ஒரு பரந்த மனப்பான்மையுடைய, வளமான நாடு. இங்கு, பயங்கர வாதச் செயல் நடைபெறும் என்று கொடுங்கனவாகக்கூட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 
                     
தனது சித்தாந்தம் அல்லது நம்பிக்கையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு, மாற்று நம்பிக்கை கொண்டோரின் மனதில் மிகப்பெரிய கிலியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் எண்ணத்தில், அவர்கள் மீதோ, மாற்று நம்பிக்கைச் சின்னங்களின் மீதோ பெரிய வன்முறையை ஏவி விடுவதே பயங்கரவாதம் எனப்படும்.

இப்பொழுது, பெஹ்ரிங் ப்ரேவிக்கை கிறித்துவத்தின் ஒசாமா பின்லாடன் என்று கூப்பிடத் தொடங்கியுள்ளார்கள். தனது பிரகடனத்திற்கு, இந்துத்து வாவிலிருந்து சில கூறுகளை கடன் வாங்கியிருக்கிறான் இந்த இளைஞன். இதனை வலைத்தளத்தில் படிக்கும் தீவிர கிருத்துவப்பற்று கொண்ட இளைஞர்கள், இவனுடைய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வன்முறையை நாடும் ஆபத்து உள்ளது. சிறிய கீறல்களாக உள்ள இந்த வலதுசாரி பயங்கரவாதம், ஐரோப்பா முழுவதும் வெளிப்படும் அபாயம் உண்டு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், பயங்கர வாதமும் உலகமயமாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றுதான் கூற வேண்டும். இன்றைய தகவல் தொழில் நுட்பமும், ஊடகங்களும் எகிப்திய புரட்சிக்கும் உதவுகிறது, தீவிரவாத சித்தாந்தங்களை உலகெங்கும் தூவவும் துணை புரிகிறது. 

ஐரோப்பிய கிருத்துவ சித்தாந்தத் திற்குள்ளும் தீவிரவாதம் தலைதூக்கிவிட்ட நிலையில், இனி எந்த நாடும், எந்த மதமும், மத உட்பிரிவும், இந்த தீவிரவாதத்தின் வெளிப்பாடான பயங்கரவாதத்தில் இருந்து தப்ப முடியாது. ஐரோப்பாவிலிருந்து இஸ்லாமியர்களைத் துரத்த நினைக்கும் பிரேவிக், பெண்விடுதலையையும் வெறுக்கிறான். 

இஸ்லாமியத் தீவிரவாதிகளும் பெண்களை அடிமைகளாக நடத்தவே விரும்புகிறார்கள். இந்துத்துவ தீவிரவாதிகளும் பெண்கள் மீது அவ்வப்போது வன்முறையை ஏவி விடுவதைப் பார்க்கின்றோம். இஸ்லாமைப் பாதுகாக்க ஒசாமாவிற்கு இருந்த எல்லா நியாயங்களும், ஐரோப்பியக் கிருத்துவத்தை அல்லது அதை ஒட்டிய கலாச்சாரத்தைப் பாதுகாக்க பிரேவிக்கிற்கு இருக்கிறது. இவர்கள் முன்வைத்த நியாயங்களே, பாபரி மசூதியை இடித்துத் தள்ளுவதற்கு இந்துத்துவத் தீவிரவாதிகளுக்கு இருந்தது. 

இஸ்லாமியத் தீவிரவாதி, இந்துமதத் தீவிரவாதி, கிருத்துவத்  தீவிரவாதி, யூதத்தீவிரவாதி, பவுத்தத் தீவிரவாதி என்று அவரவர் போக்கில் சொல்லிக்கொண்டே போகலாம். பிரேவிக் மட்டுமல்ல, எல்லாத் தீவிரவாதிகளுமே, 1500 என்ன, 15000 பக்கங்கள் கொண்ட தங்களுக்கான சித்தாந்தப் பிரகடனங்களை எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

அகிம்சையைப் போற்றும் பவுத்தம் வேர்பிடித்துள்ள இலங்கை யில்,  ஆயிரக் கணக்கான தமிழ்மனித உயிர்கள், பிணங் களாக அறுவடை செய்யப்பட வில்லையா? மும்பையில், வடஇந்தியர்கள் மீது அவ்வப்போது வெறுப்பு உமிழப்பட்டு வன்முறை வெடிப்பதில்லையா? கஷ்மீரிலிருந்து, பண்டிட்கள் விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்க வில்லையா?


ஆர்தர் வாஸ்கோ எனும் யூதப்பாதிரியார்(ரப்பி) மிக அழகாகச் சொல்லுகிறார். “மதங்கள் நேசத்தையும், நீதியையும் வலியுறுத்துகின்றன என்கிறோம், அவரவருக்கான மதங்களை ஆடையாக அணிந்து கொள்கிறோம், ஆயினும், வெறுப்பையும், மனித ரத்தத்தையும் கொண்டு, ஆடையின் சில இழைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த உண்மையை எல்லா மதத்தினரும் ஒத்துக்கொண்டால் மட்டுமே, ஆடைகள் கிழியாமல், தீவிரவாத இழைகளை எப்படிக் கழுவலாம் என்று யோசிக்க முடியும்” என்கிறார் அவர். நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவின் மேயர், ஜனநாயகத்தையும் அன்பையும் கொண்டு, பயங்கரவாதத்தை தண்டிப்போம் என்கிறார்.  நார்வேயின் பிரதமரும் இந்த முற்போக்குச் சிந்தனையை வழிமொழிகிறார்.  

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, காவல்துறையும், பாதுகாப்புப் படைகளும் மட்டும் போதாது. அரசியலும், மதத் தீவிரவாதமும் இரண்டறக்கலப்பது தடுக்கப்படவேண்டும். மதம் தனிமனித நம்பிக்கை சார்ந்தது. மதநம்பிக்கையும் சரி, நம்பிக்கையின்மையும் சரி, பொது வெளியில் கலப்பது தவிர்க்கப்படவேண்டும். ஐ.நா சபையிலிருந்து உள்ளூர் ஆசிரியர்கள் வரை, எல்லோரும் ஜனநாயகத்தையும், சகிப்புத் தன்மையையும், மனித விழுமியங்களையும் அடிவேரிலிருந்து பலப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அதைவிட முக்கியம்.


கடந்தகால, நிகழ்காலப் பாடங்களைக் கற்று, வேற்றுமைகள் நிறைந்த இந்தியா உலகுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும். நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று ஆகியவை வெறியாக மாற்றப்படுவதற்கு யாருமே துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் கட்சிகளின் வாக்குவங்கி அரசியல் வெறுப்பைத் தான் விதைக்கும்.
 
வேற்றுமையையும், மாற்றுக் கருத்துக்களையும் கொண்டாடுவோம். அவற்றைப் பள்ளிகளிலிருந்து தொடங்குவோம். 
                                                          நட்புடன் 
                                                                   
                                                                                                                           
                                                        அ .நாராயணன்